top of page

இயேசு தாம் பிறப்பதற்கு முன்பிலிருந்து அநாதியாக இருந்தாரா?

Mar 27, 2020
2 min read

எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்; அவருடைய புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது. (மீகா 5:2)

மீகா என்பவர் ஒரு தீர்க்கதரிசி ஆவார். இயேசு பிறப்பதற்கு 700 ஆண்டுகளுக்கு முன்பு இவர் வாழ்ந்தார். மேசியாவின் சரியான பிறந்த இடத்தை அவர் தீர்க்கதரிசனமாக‌ கூறினார் – பெத்லகேம். இது ஒரு ஆச்சரியமான விவரம் தான், ஆனால் இந்த வசனத்தில் இன்னும் ஆச்சரியப்படுத்தும் வேறு ஒரு விவரமும் உள்ளது.

இந்த வசனத்தில் சொல்லப்பட்டவர் பெத்லகேம் ஊரிலிருந்து வந்தாலும்,  அவருடைய ஆரம்பம் உண்மையில் பெத்லகேமில் இருந்து தொடங்கவில்லை என்று மீகா அறிவிக்கிறார். அவருடைய தொடக்கம்  “அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது“ என்று தீர்க்கதரிசனமாக கூறுகிறார்.

ஒரு நிமிடம் பொறுங்கள்! … ஆனால், நித்தியமானவர் இறைவன் மட்டும் தானே! ஆம், அநாதியாக இருப்பவர், தொடக்கமில்லாமல் இருப்பவர் இறைவன் மட்டும்தான்.

இயேசு அநாதியாக‌, காலத்திற்கும் படைப்பிற்கும் முன்பே, நித்தியமாகவும், படைக்கப்படாதவராகவும் இருந்தார்.

“நாம் அனைவரும் பிறப்பதற்கு முன்பே இருந்திருக்கின்றோம். இதனால் நாம் கடவுளாக மாறிவிடமுடியுமா?”  என்று முஸ்லிம்கள்  கேட்பார்கள்.

முஸ்லிம்களின் இந்த வாதத்திற்கு குர்‍ஆனில் எந்த ஒரு சான்றுமில்லை. இது முஸ்லிம்களின் கற்பனையான வாதமாகும். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், நாம் பிறப்பதற்கு முன்பு நாம் இருக்கவில்லை.  நீங்கள் பிறப்பதற்கு முன்பே இருந்திருந்தால், நீங்கள் நித்தியமானவர் என்று அழைக்கப்படுவீர்கள்! நீங்கள் அநாதியாக இருந்திருந்தல், நீங்கள் கடவுளாக கருதப்படுவீர்கள்.

நாம் நம்முடைய தாயின் கர்ப்பத்தில் கருத்தரித்த தருணத்தில் தான் நம்முடைய தொடக்கம் ஆரம்பிக்கிறது. அதற்கு முன் 1 வினாடி கூட நாம் இல்லை! உடனே முஸ்லிம்கள், “சரி ஒப்புக்கொள்கிறோம், ஆனால் நாம் அனைவரும் இறைவனின் அறிவில் இருந்தோம்” என்றுச் சொல்வார்கள்.

இறைவன் சர்வஞானியாக எல்லாவற்றையும் அறிந்தவராக இருக்கிறார், உண்மை தான். அவருடைய பரிபூரண மற்றும் முழுமையான அறிவில், நாம் பிறப்பதற்கு முன்பே இறைவன் நம் ஒவ்வொருவரையும் அறிந்திருந்தார் என்பதும் உண்மையே. ஆனால், இதன் அர்த்தம், “நாம் ஏற்கனவே உயிருள்ள மனிதர்களாக இருந்தோம்” என்று எடுத்துக்கொள்ள முடியாதல்லவா?

இயேசு, “நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன்.” என்று கூறினார் (வெளி  22:13).

இங்கு இயேசு தெளிவாக, குழப்பம் வராத வண்ணமாக “தான் இறைவன்” என்றுச் சொல்வதை கவனிக்கவும். இந்த வசனத்தில் சொல்லப்பட்டவைகளை முஸ்லிம்கள் சுலபமாக அடையாளம் கண்டுக்கொள்வார்கள். அல்லாஹ்வின் 99 பெயர்களில் ஒன்றான “அல்- அவ்வல் மற்றும் அல்-ஆகிர்” என்ற பட்டப்பெயரை இங்கு அவர்கள் நினைவு கூறுவார்கள். முஹம்மது வந்து இந்தப் பெயரை தன் மக்களுக்கு கற்பித்துக் கொடுப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு  முன்பே இயேசு இந்த தெய்வீக “அல்-அவ்வல் மற்றும் அல்-ஆகிர் “ என்ற‌ பட்டத்தை தன்னுடையது என்று கூறினார்.

இயேசு பெத்லகேமில் பிறப்பதற்கு முன்பு, அவர் திரித்துவத்தின் இரண்டாவது நபராக இருந்தார் (யோவான் 17: 5, 17:24). தந்தையும் குமாரனும் நித்திய காலமாக அன்பு, ஐக்கியம் மற்றும் மகிமையுடன் கூடிய  உறவு இவர்கள் மத்தியில் இருந்ததாக இந்த வசனங்கள் கூறுகின்றன.

கேப்ரியல் தூதன் மரியாளுக்கு நற்செய்தியை அறிவிப்பதற்கு முன்புவரை  “இயேசு” என்ற பெயர் திரித்துவத்தின் இரண்டாவது நபரின் பெயராக அறியப்படவில்லை (லூக்கா 1:31). ஆனால் நித்திய குமாரன் தன்னை “இயேசு” என்று உலகிற்கு வெளிப்படுத்துவதற்கு முன்பே நித்திய காலமாக அநாதியாக இருந்தார் (டேவிட் குஜிக்).

பெத்லகேமில் பிறப்பதற்கு முன்பு, எல்லாவற்றையும் படைத்தவர் இயேசு ஆவார் (கொலோசெயர் 1: 16-17, யோவான் 1: 1-3). “அவர் எல்லாவற்றிற்கும் முன்பாக இருந்தவர் ஆவார்”.

அவர் எல்லாவற்றையும் படைத்தவர் என்பதால், அவர் நித்தியமானவர், மேலும் அவர் படைத்தவற்றின் ஒரு பகுதியாக இருக்கவில்லை. இறைவனைத் தவிர மற்ற அனைத்துமே படைக்கப்பட்டவைகள் தான். எது படைக்கப்படவில்லையோ, அது தான் கடவுள்/இறைவன். எல்லாவற்றையும் படைத்தவர் இயேசு ஆவார்; எனவே அவர் இறைவன் ஆவார். அவர் தனது சொந்த வேலையின் ஒரு பகுதியாக இருக்க முடியாது. (கிளார்க்)

 
 
 

Comments


bottom of page