top of page

ரமளான் நாள் 30 – ஆயிரம் நீதிமான்களை பார்க்கிலும் …

Aug 19, 2012
2 min read

அன்புள்ள தம்பிக்கு,

சாந்தியும் சமாதானமும் உனக்கு உண்டாவதாக.

தம்பி, உன் பதில் கடிதங்களை பார்க்கும் பொழுது, உனக்குள் ஒரு மாற்றம் ஏற்பட்டு வருவதை காணமுடிகிறது. நீ மீண்டும் இறைவனிடம் வந்தால் அவர் உன்னை மன்னிப்பாரா என்று யோசிக்கிறாய். அல்லாஹ் இணைவைப்பை ஒருநாளும் மன்னிக்கமாட்டான் என்று உன்னை பயமுறுத்திவைத்திருப்பதை உணர்கிறேன். நீ என்னோடுகூட ஓய்வுநாள் பாடசாலைகளில் படித்த வேதாகம நிகழ்ச்சிகளை மறந்திருப்பாய் என்று நான் நினைக்கவில்லை. குறிப்பாக நீ மிகவும் விரும்பும் ‘கெட்ட குமாரன் கதையை‘ நீ மறந்திருக்கமாட்டாய். நீ இருக்கும் நாட்டில் இறைவேதம் வாசிக்க தடையிருப்பதால் நான் அந்த கதையை உனக்கு மீண்டும் சொல்லுகிறேன். கவனமாக கேள்.

ஒரு மனிதனுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள். அவர்களில் இளையவன் தகப்பனை நோக்கி: தகப்பனே, சொத்தில் என் பங்கை எனக்குத் பிரித்து தரவேண்டும் என்றான். எனவே தகப்பன் அவர்களுக்குத் தன் சொத்தை பங்கிட்டுக் கொடுத்தார். சில நாட்களுக்குப் பின்பு, இளையமகன் எல்லாவற்றையும் சேர்த்துக்கொண்டு, தூரநாட்டுக்குப் புறப்பட்டுப்போய், அங்கே துன்மார்க்கமாய் வாழ்ந்து, தன் சொத்தை எல்லாம் அழித்துப்போட்டான். எல்லாவற்றையும் அவன் செலவழித்தபின்பு, அந்தத் நாட்டில் கொடிய பஞ்சமுண்டாயிற்று. அப்பொழுது அவன் குறைவுபடத் தொடங்கி, அந்த நாட்டின் குடிகளில் ஒருவனிடத்தில் போய் சேர்ந்துக்கொண்டான். அந்தக் குடியானவன் அவனைத் தன் வயல்களில் பன்றிகளை மேய்க்கும்படி அனுப்பினான். அப்பொழுது பன்றிகள் தின்னும் தவிட்டினாலே தன் வயிற்றை நிரப்ப ஆசையாயிருந்தான், ஆனாலும் ஒருவனும் அதை அவனுக்குக் கொடுக்கவில்லை.

மனமாற்றம்:

அவனுக்குப் புத்தி தெளிந்தபோது, அவன்: என் தகப்பனுடைய கூலிக்காரர் எத்தனையோ பேருக்குப் போதுமான சாப்பாடு இருக்கிறது, நானோ பசியினால் சாகிறேன். நான் எழுந்து, என் தகப்பனிடத்திற்குப் போய்: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன். இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரனல்ல, உம்முடைய கூலிக்காரரில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன் என்று சொல்லி எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனிடத்தில் வந்தான்.

கெட்ட குமாரன்அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தார். குமாரன் தகப்பனை நோக்கி: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன், இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரன் அல்ல என்று சொன்னான். அப்பொழுது தகப்பன் தன் ஊழியக்காரரை நோக்கி: நீங்கள் உயர்ந்த வஸ்திரத்தைக் கொண்டுவந்து, இவனுக்கு உடுத்தி, இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் பாதரட்சைகளையும் போடுங்கள். கொழுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள். நாம் விருந்துண்டு, சந்தோசமாயிருப்போம். என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான் காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான் என்றான். அப்படியே அவர்கள் சந்தோஷப்படத் தொடங்கினார்கள்.

இந்த உவமை கதைக் கூடாக ஈஸா அல் மஸீஹ் (இயேசு கிறிஸ்து) பிதாவின் அன்பை போதித்தார்கள். பிதாவின் அன்பை நான் உனக்கு புதிதாக கூறத்தேவையில்லை. என் அன்பு தம்பியே, நீயும் இந்த மகனை போலதான் இப்பொழுது இருக்கிறாய். இறைவனின் வீடாகிய கிறிஸ்தவ குடும்பத்திலிருந்து வெளியேறி, உலக ஆசைகளுக்கு அடிமையாகி, முன்பு உன்னிடமிருந்த நிம்மதி, சந்தோஷத்தை இழந்து தவித்து கொண்டிருக்கிறாய். இஸ்லாம் எனும் வரட்சியில் சிக்கி, ஆவிக்குரிய பஞ்சம் உன்னை ஆக்கிரமித்துள்ளது.

உன் தகப்பனாகிய பரம பிதா, நீ எப்பொழுது திருப்பி வருவாய் என்று வாசலில் நின்று காத்துக்கொண்டிருக்கிறார் என்பதை புரிந்துகொள். புலியின் மேல் சவாரி செய்பவன் திரும்பி வருவது கூடாத காரியம் என்பது உண்மை! ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவால் எல்லாம் கூடும். நீ அவரிடம் கையேந்தினால் போதும் உனக்காக எல்லா காரியங்களையும் அவர் செய்வார்.

அல்லாஹ் இணைவைக்கும் பாவத்தை மன்னிக்கவே மாட்டான் என்று உன்னை இஸ்லாத்துக்கு மாற்றியவர்கள் சொல்லியிருப்பார்கள். அது உண்மைதான். அது மட்டுமல்ல அவனால் ஒரு பாவத்தையும் மன்னிக்க முடியாது என்பதற்கு சிறந்த ஆதாரம் தான் இஸ்லாம் மதத்தை தோற்றுவித்த முஹம்மது தனது மரணதருவாயில், தனது அன்பு மகளிடம் சொல்கிறார் “நான் போகும் இடத்தை அறியேன்“ !

இப்பொழுது உனக்கு புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். இதுதான் இஸ்லாமிய ஸ்தாபகரின் நிலையென்றால் மற்றவர்களின் நிலையை எண்ணிப்பார்க்க வேண்டுமா?

இயேசுவின் சிலுவை மரணத்தை நினைத்துப்பார். அவர் பட்ட வேதனைகள் யாருக்காக? அவர் பட்ட காயங்கள் யாருக்காக? யாருக்கு அடிக்க வேண்டிய கசையடிகளை அவர் ஏற்றுக்கொண்டார். அவர் கரங்களில் ஆணியடிக்கப்பட்டது யாருக்காக? சிந்தித்து பார் என் அன்பு தம்பியே!

இப்பொழுது மனந்திருப்பி நீ ஜெபிக்க வேண்டிய முறையை நான் உனக்கு சொல்லித்தர தேவையில்லை. உனக்கு நன்கு தெரியும். தாமதிக்காதே உடனடியாக செயற்படு! உனக்கு ஒத்தாசை வரும் இறைவனிடத்திற்கு உன் கரங்களை உயர்த்து!

ஜெபித்துவிட்டு உன் பதில் கடிதத்தை எனக்கு எழுது.

தம்பி, இது இந்த ரமளான் மாதத்தில் நான் எழுதும் 30வது கடிதமாகும்.

இனி உன்னை தினமும் தொந்திரவு செய்யாமல், வாரம் ஒரு கடிதம் எழுத முயற்சி எடுப்பேன். மேலும் நீ கேட்ட அனேக கேள்விகளுக்கு நான் பதில் அளிக்கவேண்டியுள்ளது.

உன்னை அடுத்த கடிதத்தில் சந்திக்கிறேன்.

இப்படிக்கு உன் சகோதரன்

தமிழ் கிறிஸ்தவன்

 
 
 

Comments


bottom of page